Sunday, 2 June 2013

குட்டிப்புலி-சினிமா விமர்சனம்.

நடிகர் : சசிகுமார்
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : முத்தையா
இசை : ஜிப்ரான்
ஓளிப்பதிவு : மகேஷ் முத்துசுவாமி
   




      ஊருக்குள் சண்டியராக சுற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகனான சசிகுமாருக்கு, திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று அவனுக்கு பெண் பார்க்கிறார் அம்மா சரண்யா பொன்வண்ணன். ஊருக்காக அரிவாள் தூக்கி தன் உயிரை மாய்த்துவிட்டு அம்மாவை தவிக்க விட்டுச் சென்ற அப்பாவைப் போல், தானும் அடிதடி என்று சுற்றுவதால், அம்மா நிலைமை போன்று வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என நினைத்து திருமணத்தை வெறுக்கிறார் சசிகுமார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி வெளியே தங்குகிறார்.

இந்நிலையில், அந்த ஊருக்கு புதிதாக வரும் லட்சுமிமேனன், பெண்களை அதிகமாக மதிக்கும் சசிகுமாரின் குணத்தை கண்டு அவர்மேல் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை சசிகுமாரிடம் சொல்லவரும் நேரத்தில், ஏற்கெனவே சசிகுமாரிடம் அடிவாங்கிய கூட்டம் ஒன்று சசிகுமாரை வெட்டிச் சாய்க்கிறது. இதைக்கண்டதும் லட்சுமிமேனன் அதிர்ச்சியடைகிறார்.

உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சசிகுமாரை காப்பாற்ற 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு லட்சுமிமேனன் சசிகுமாரின் நண்பரிடம் தன்னுடைய நகையை கொடுத்து அவரை காப்பாற்ற உதவுகிறார். இதிலிருந்து மீண்டு வருகிறார் சசிகுமார்.

அரசு அதிகாரியாக வேலைசெய்யும் லட்சுமிமேனனின் அப்பாவுக்கு தனது மகள் சசிகுமாரை விரும்புவது தெரியவரவே, வேறு ஊருக்கு மாறுதலாக முடிவெடுக்கிறார். இதற்காக, அதே ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூர்த்தியிடம் சென்று உதவி கேட்கிறார். ஆனால் மூர்த்தியோ நேர்மையான அதிகாரியை மாற்ற மனமில்லாததால், சசிகுமாரை அழைத்து அதட்டி வைக்கலாம் என நினைத்து, அவரை அழைத்துவர தனது அடியாட்களை ஏவி விடுகிறார்.

மூர்த்தியை சந்திக்க வரும் சசிகுமாரோ மூர்த்தியையும், அவரது ஆட்களையும் அடித்து துவம்சம் செய்கிறார். லட்சுமிமேனனின் அப்பாதான் மூர்த்தியை தன்மீது ஏவி விட்டார் என தவறாக நினைக்கும் சசிகுமார், லட்சுமிமேனனின் வீட்டிற்கு சென்று அவரது அப்பாவிடம் திருமணம் செய்தால் உன்னுடைய மகளைத்தான் திருமணம் செய்வேன் என சவால் விட்டு திரும்புகிறார்.

இந்நிலையில், சசிகுமாரால் அடித்து துவம்சம் செய்யப்பட்ட மூர்த்தி அவரை தீர்த்துக்கட்ட துடிக்கிறார். இறுதியில் இந்த கும்பலிடமிருந்து சசிகுமார் தப்பித்தாரா? லட்சுமிமேனனை கரம் பிடித்தாரா? தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தாயின் கனவு நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

அழகான கிராமம், அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணம் என காட்சிப்படுத்தியதில் இயக்குனர் முத்தையா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். முன்பாதியில் அடிதடி, காமெடி, செண்டிமெண்ட் என விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக, சின்ன சின்ன வசனங்களைக்கூட ரசிக்கும்படியாக அமைத்திருப்பது சிறப்புக்குரியது. முழுக்க முழுக்க பெண்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் களமிறங்கியிருக்கும் இயக்குனர் முத்தையாவுக்கு பாராட்டுக்கள்.

அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். குட்டிப்புலியாக சசிகுமார், தனது முந்தைய படங்களில் உள்ள அதே அலப்பறையை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். முறுக்கு மீசை, கையில் அரிவாள், தூக்கி கட்டிய லுங்கி என பக்கா சண்டியர்போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்திற்கு படம் இவருக்கென்று வசனங்கள் உருவாக்குவார்கள் போலும்.

இந்த படத்திலும் இவர் பேசும் வசனங்கள் பலத்த கைதட்டல்களை பெறுகின்றன. சசிகுமாரின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனுக்கு கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். சசிகுமாரைவிட இவருக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சபாஷ் என்று சொல்கிற அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். லட்சுமிமேனன் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.

சசிகுமாரை துரத்தி துரத்தி காதலிப்பது மட்டும்தான் இவருடைய வேலை. மற்றபடி படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. காமெடிக்காக ‘கனா காணும் காலங்கள்’ குழு செய்யும் ரகளை ரசிகர்களை ஆங்காங்கே உற்சாகப்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையில் ‘காத்து காத்து’, ‘அருவாக்காரன்’ பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு, வசனம், காமெடி காட்சிகள் என அனைத்தும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த குட்டிப்புலி இன்னும் கொஞ்சம் கூடுதலாக பாய்ந்திருக்கும். மொத்தத்தில் ‘குட்டிப்புலி’ பதுங்கிப் பாயும்.

Tuesday, 21 May 2013

சூது கவ்வும்-சினிமா விமர்சனம்.


நடிகர் : விஜய் சேதுபதி
நடிகை : சஞ்சிதா ஷெட்டி
இயக்குனர் : நளன் குமாரசாமி
இசை : சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள்.

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள்.

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார்.

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான்.

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன்.

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.

அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார்போலும்.

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார்.

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது. நண்பர்களாக வரும் மூன்று பேரும் குறும்படங்கள் மூலம் பரிச்சயமான முகம் என்றாலும், வெள்ளித்திரையில் மேலும் பளிச்சிடுகிறார்கள். மூவரின் நடிப்பும் வெகுபிரமாதம்.

இவர்களுடைய பயம் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய மூவருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார்.

முதல்பாதி வரை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இவருடைய மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.

சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம்.

முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

ஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள்.

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை.

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை.

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சூது கவ்வும்’ நிச்சயம் வெல்லும்.

Wednesday, 30 January 2013

விஸ்வரூபம்-சினிமா விமர்சனம்.


நியாயமாக விஸ்வரூபம் படத்திற்கு பிராமணர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருக்கும். எப்படி என்கிறீர்களா... கதையைப் படியுங்கள்... பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு

Wednesday, 23 January 2013

புத்தகம்-சினிமா விமர்சனம்


அரசியல்வாதி பதுக்கிய கறுப்பு பணத்தை மீட்கும் இளைஞன் கதை.


நாயகனான சத்யா, வேலை பார்க்கும் நண்பர்கள் சஞ்சய் பாரதி, விக்னேசுடன் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கி படிக்கிறார். சத்யாவுக்கும் டி.வி. நிருபர் ராகுல் பிரீத்துக்கும் மோதல் உருவாகி காதலாக மலர்கிறது.

ஊழல் வழக்கில் சிக்கும் அரசியல்வாதி சுரேஷ், கவுன்சிலர் சந்தான பாரதிக்கு எதிராக செய்தி வெளியிட்டு அவர்கள் பகைக்கு ஆளாகிறார் ராகுல் பிரீத். ஒரு கட்டத்தில் நூலகத்தில் உள்ள புத்தகம் ஒன்று சத்யா கைக்கு கிடைக்கிறது. அதில் சுரேஷ் சுடுகாட்டில் மறைத்து வைத்த பலகோடி ரூபாய் பற்றிய ரகசிய குறிப்பு இருக்கிறது. அதை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தேடி மூட்டை மூட்டையாய் கறுப்பு பணத்தை சத்யாவும் நண்பர்களும் கண்டெடுக்கின்றனர்.

அந்த பணத்தை ஜெகபதி பாபு உதவியோடு கைப்பற்ற சுரேஷ் முயற்சிக்கிறார். சத்யாவிடம் பணம் இருப்பதை கண்டுபிடித்து துரத்துகின்றனர். இதனால் நண்பர்களை ஆபத்து சூழ்கிறது. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்பது மீதி கதை...

காதல் காமெடியில் திகிலை கோர்த்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் விஜய் ஆதிராஜ். சத்யா கேரக்டரில் நேர்த்தி. ராகுல் பிரீத்துக்கும் இவருக்குமான மோதலும், காதலும் சுவாரஸ்யம். கஷ்டப்பட்டு பணம் புரட்டி அடிப்பட்ட நண்பன் தாயை காப்பாற்றும் சென்டிமென்ட் அழுத்தம்.

ராகுல் பிரீத் அரசியல்வாதிகளுடன் மோதும் வலுவான நிருபர் வேடத்தை கஷ்டப்பட்டு சுமக்கிறார். காதலில் ஓ.கே. சஞ்சய் பாரதி, விக்னேஷ், மனோபாலா கலகலப்பூட்டுகின்றனர். முதல் பகுதி கதையில் தொய்வு இருந்தாலும் பிற்பகுதி வேகம் பிடிக்கிறது. சுரேஷ், சந்தான பாரதி அரசியல் வில்லத்தனம் காட்டுகின்றனர். ஜேம்ஸ் வசந்தின் பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது. லட்சுமண் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.



Saturday, 19 January 2013

சமர்-சினிமா விமர்சனம்.


காதலியை தேடி வெளிநாடு போய் ஆபத்தில் மாட்டிக் கொண்டு மீளப்போராடும் இளைஞன் கதை...

தமிழக எல்லைப்பகுதியில் வனத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு ‘கைடு’ ஆக இருப்பவர் விஷால். அங்கு வரும் சுனைனாவுக்கு விஷாலின் சாதுரியங்கள் பிடித்துபோக இருவருக்கும் காதல். ஒரு கட்டத்தில்  விஷால் காட்டையே கட்டிக்கொண்டு அழுவது சுனைனாவுக்கு பிடிக்காமல்போக காதலை முறித்து கொண்டு பாங்காக் பறக்கிறார்.

காதல் தோல்வியில் விஷால் நொறுங்கி தவிக்கிறார். ஒருநாள் பாங்காங்கில் இருந்து சுனைனாவின் காதல் கடிதத்துடன் உடனே புறப்பட்டு வருமாறு டிக்கெட் பார்சலில் வருகிறது. அங்கு பயணப்படுகிறார் விஷால்.

விமானத்தில் போகும்போது திரிஷாவின் சினேகம் கிடைக்கிறது. பாங்காக்கில் இறங்கியதும் சுனேனா குறிப்பிட்ட இடத்தில் போய் தேடுகிறார். அவர் வரவில்லை. பல நாட்கள் காத்திருந்தும் ஏமாற்றம்.. சுனைனாவை கண்டுபிடிக்க திரிஷாவின் உதவியை நாடுகிறார் விஷால். அப்போது ஒரு கும்பல் விஷாலை கொல்ல துப்பாக்கியால் சுடுகிறது. இன்னொரு கோஷ்டி காப்பாற்றி பெரிய கம்பேனியில் அழைத்து போய் உட்கார வைத்து காணாமல் போன தங்களின் முதலாளி என கொண்டாடுகிறது.

பத்திரிகைகளில் பெரும் கோடீஸ்வரர் என வந்த அவரது படங்களையும் காட்டுகின்றனர். விஷால் நான் அவனல்ல என்று சொல்லியும் நம்ப மறுக்கின்றனர். போலீசும் சல்யூட் அடித்து மரியாதை கொடுக்கிறது.

திடீரென்று ஒருநாள் மரியாதைகள் காணாமல் போகிறது. முதலாளி என்று கொண்டாடியவர்கள் கம்பெனிக்குள் நுழைய விடாமல் விரட்டியடிக்கின்றனர். தன்னை சுற்றி சதி வேலை பின்னப்பட்டு இருப்பதை விஷால் உணர்கிறார். அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன்பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் அதிரடிகள்...

காட்டில் மரங்களை வெட்டும் கடத்தல் கும்பலை ஆக்ரோஷமாய் தாக்கி விஷால் அறிமுகமாகும் ஆரம்பமே சூடு பறக்கிறது. பிறகு சுனைனா காதல், முறிவு என போகும் கதை பாங்காக் பயணித்ததும் விறுவிறுப்புக்கு தாவுகிறது.

விஷாலை கொலை கும்பல் துப்பாக்கியுடன் துரத்துவது வியர்க்க வைக்கிறது. தன் அட்டை படத்துடன் பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்து அதிர்வது... பேரிய தொழில் அதிபர் என தன் மேல் முத்திரை குத்தப்பட்டதும் மறுத்து தப்பிக்க முயல்வது என மர்ம முடிச்சுகளுடன் படத்தோடு கட்டிப்போடுகின்றன. கிளைமாக்சில் தந்திரமாக எதிரிகளை வீழ்த்தி கைதட்ட வைக்கிறார்.

திரிஷா வழக்கமான காதல் சமாச்சாரங்களில் இருந்து வித்தியாசம் காட்டுகிறார். வில்லன்களுக்கும் அவருக்குமான தொடர்பு அம்பலப்படும்போது  திடுக்கிட வைக்கிறது.

சுனைனா சில நிமிடங்கள் ஆவேசமாய் வந்து, கிளுகிளு ஆட்டம் போட்டு காணாமல் போகிறார். சம்பத், ஜெயபிரகாஷ், ஸ்ரீமன், ஜான் விஜய் கேரக்டர்கள் நேர்த்தி... பணக்கார வில்லன்களாக வரும் ஜே.டி சக்கரவர்த்தி மனோஜ் பாஜ்பாயின் சைக்கோத்தன விளையாட்டுகள் பரபரக்க வைக்கிறது.

நல்லவர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள். வில்லன்களோடு கைகோர்ப்பது இன்னொரு அதிர்வு. ஹைடெக் கதை களத்தில் சஸ்பேன்ஸ், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் திரு... காட்சியோட்டத்தில் இருந்த அழுத்தம் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பலம் சேர்க்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் கேமரா பாங்காக் அழகை அள்ளுகிறது.

Wednesday, 16 January 2013

அருவி பூங்கா-குற்றாலம் ஐந்தருவி .


 குற்றாலம் ஐந்தருவி பழத்தோட்ட பண்ணையில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான அருவி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அவர்கள் பொழுதை போக்க குறிப்பிட்டு சொல்லும் படியான வசதிகள் குற்றாலத்தில் இல்லை. குறிப்பாக மெயினருவி பகுதியில் அமைந்துள்ள பூங்கா மற்றும் சிறுவா பூங்கா, ஐந்தருவி செல்லும் சாலையில் படகுகுழாம் ஆகியவை மட்டுமே உள்ளது. சீசன் காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும். இதற்கு குற்றாலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததும் ஒரு காரணமாகும். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலத்திற்கு ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அவல நிலை உள்ளது வேதனைக்குரியது. இந்த குறையை போக்குவதற்காக ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் அருவிப்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குற்றாலம் ஐந்தருவி பகுதியில் தோட்டக்கலை சார்பில் அமைந்துள்ள பழத்தோட்ட பண்ணையில் ரூ. 5.22 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாய் அருவி பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மலை மீது இயற்கை எழிலுடன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமையயுள்ள இந்த அருவி பூங்காவில் குளம், வாகனங்கள் நிறுத்துமிடம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலர் வனம், சிறுவர்கள் விளையாடும் இடம், நீர்வீழ்ச்சி, நீர்விளையாட்டு திடல், நீரோட்ட நடைபாதை, பாறைத்தோட்டம், காகிதப்பூ தோட்டம், நறுமணப் பூங்கா, சிற்ப விலங்கு தோட்டம், பழத்தோட்டம், கற்பாதை பூங்கா, இயற்கை பூங்கா, உணவகம், பசுமை குடில், புல்வெளி, சூரிய ஒளிவிளக்கு போன்றவை அமைக்கப்படவுள்ளது. அருவி பூங்கா அமைக்கும் பணி துவங்கி சுமார் 2 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில் இந்தாண்டு சீசனுக்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றாலும், பணிகள் முழுமை பெறவில்லை. இந்தாண்டு சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் துவங்கிவிடும். அதற்குள் பணிகள் முடித்து, சுற்றுலாப் பயணிகள் உள்ளே பூங்காவுக்குள் அனுமதிக்கபடுவார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது. அருவி பூங்கா பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருப்பதாலும் ஆண்டு முழுவதும் பரவலான மழை, சில்லென்ற சூழல், மலைச்சரிவுகள், இயற்கையான நீரோடை, ஐந்தருவிக்கு பாய்ந்து செல்லும் தண்ணீரின் ஆர்ப்பரிக்கும் சத்தம், மேகக் கூட்டகள் என இயற்கை வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த அருவி பூங்கா அனைவரையும் கவரும் வகையில் அமைய உள்ளது.
Tag:குற்றாலம்,  அருவி பூங்கா 

Tuesday, 15 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா.



நடிகர் : சந்தானம், டாக்டர் சீனிவாசன், சேது
நடிகை : விசாகா
இயக்குனர் : மணிகண்டன்
இசை : தமன்
ஓளிப்பதிவு : கே.பாலசுப்பிரமணியன்
படத்தோட கதை பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

சந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.

விசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.

பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.

சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.

சேது இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.

சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு. கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.

தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

மொத்ததில் இந்த லட்டு இனிக்கிறது.